Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி

கந்த சஷ்டி கவசம்

ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய கந்தர் சஷ்டி கவசம்

 

காப்பு

நேரிசை வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்

பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்;

நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்

சஷ்டி கவசந் தனை.

 

குறள் வெண்பா

அமரர் இடர் தீர அமரம் புரிந்த

குமரனடி நெஞ்சே குறி.

 

பொருள் - தேவர்களின் துயர் தீர சூரனுடன் போர் புரிந்த குமரன் திருவடிகளை நினைவில் நிறுத்துவாய் நெஞ்சே என்று பொருள்.

 

நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார் 

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் 

பாதம் இரண்டில் பண்மணிச் சதங்கை 

கீதம் பாடக் கிண்கிணியாட 

மைய நடஞ்செய்யும் மயில்வா கனனார் 

 

கையில் வேலால் எனைக் காக்கவென்று உவந்து 

வரவர வேலாயுதனார் வருக 

வருக வருக மயிலோன் வருக 

இந்திரன் முதலா எண்டிசை போற்ற 

மந்திர வடிவேல் வருக வருக 

 

வாசவன் மருகா வருக வருக! 

நேசக் குறமகள் நினைவோன்! வருக 

ஆறுமுகம் படைத்த ஐயா! வருக 

நீறிடும் வேலவன் நித்தம் வருக 

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக 

 

சரவண பவனார் சடுதியில் வருக 

ரஹண பவச ரரரர ரரர 

ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி 

விணபவ சரவண வீரா நமோநம 

நிபவ சரவண நிற நிற நிறென 

 

வசர ஹணபவ வருக வருக 

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக 

என்னை ஆளும் இளையோன் கையில் 

பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும் 

பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க 

 

விரைந்தெனைக் காக்க வேலோன் வருக 

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும் 

உய்யொளி சௌவும் உயிரையுங்கிலியும் 

கிலியுஞ்சௌவும் கிளரொளி யையும் 

நிலைபெற்று என் முன் நித்தமும் ஒளிரும் 

 

சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் 

குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக 

ஆறுமுகமும் அணிமுடி யாறும் 

நீறுஇடும் நெற்றியும் நீண்ட புருவமும் 

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் 

 

நன்னெறி நெற்றியில் நவமணிச்சுட்டியும் 

ஈராறு செவியில் இலங்குகுண் டலமும் 

ஆறிரு திண்புயத்து அழகிய மார்பில் 

பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து 

நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் 

 

முப்புரி நூலும் முத்தணி மார்பும் 

செப்பழ குடைய திருவயிறு உந்தியும் 

துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் 

நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் 

இருதொடை யழகும் இணைமுழந் தாளும் 

 

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க 

செககண செககண செககண செகண 

மொகமொக மொகமொக மொகமொக மொகென 

நகநக நகநக நகநக நககென 

டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண 

 

ரரரர ரரரர ரரரர ரரர 

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி 

டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு 

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு 

விந்து விந்து மயிலோன் விந்து 

 

முந்து முந்து முருகவேள் முந்து 

எந்தனை யாளும் ஏரகச் செல்வ 

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும் 

லாலா லாலா லாலா வேசமும் 

லீலா லீலா லீலா வினோத னென்று 

 

உன் திருவடியை உறுதியென் றெண்ணும் 

என் தலை வைத்துன் இணையடி காக்க 

என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க 

பன்னிரு விழியால் பாலனைக் காக்க 

அடியேன் வதனம் அழகுவேல் காக்க 

 

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க 

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க 

விதிசெவி இரண்டும் வேலவர் காக்க 

நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க 

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க 

 

முப்பத் திருபல் முனைவேல் காக்க 

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க 

கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க 

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க 

மார்பை இரத்ன வடிவேல் காக்க 

 

சேரிள முலைமார் திருவேல் காக்க 

வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க 

பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க 

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க 

பழுபதி னாறும் பருவேல் காக்க 

 

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க 

சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க 

நாண்ஆம் கயிற்றை நல்வேல் காக்க 

ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க 

பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க 

 

வட்டக் குதத்தை வல்வேல் காக்க 

பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க 

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க 

ஐவிர லடியினை அருள்வேல் காக்க 

கைகளிரண்டும் கருணைவேல் காக்க 

 

முன்கை இரண்டும் முரண்வேல் காக்க 

பின்கை இரண்டும் பின்னவள் இரக்க 

நாவிற் சரஸ்வதி நற்றுணையாக 

நாபிக் கமலம் நல்வேல் காக்க 

முப்பால் நாடியை முனைவேல் காக்க 

 

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க 

அடியேன் வசனம் அசைவுள நேரம் 

கடுகவே வந்து கனகவேல் காக்க 

வரும்பகல் தண்ணில் வச்சிரவேல் காக்க 

அரையிருள் தன்னில் அணையவேல் காக்க 

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க 

தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க 

 

காக்க காக்க கனகவேல் காக்க 

நோக்க நோக்க நொடியினில் நோக்க 

தாக்க தாக்க தடையறத் தாக்க 

பார்க்க பார்க்க பாவம் பொடிபட 

பில்லிசூனியம் பெரும்பகை அகல 

வல்ல பூதம் வாலாட்டிகப் பேய்கள் 

அல்லல் படுத்தும் அடங்கா முனியும் 

பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும் 

 

கொள்ளிவாப் பேய்களும் குறளைப்பேய்களும் 

பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும் 

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட 

இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் 

எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் 

 

கனபூசை கொள்ளும் காளியோடனைவரும் 

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் 

தண்டியக் காரரும் சண்டாளர்களும் 

என்பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட 

ஆனை அடியினில் அரும் பாவைகளும் 

 

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் 

நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் 

பாவைகள் உடனே பலகல சத்துடன் 

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் 

ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் 

 

காசும் பணமும் காவுடன் சோறும் 

ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும் 

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட 

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட 

கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட 

 

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட 

வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓடப் 

படியினில் முட்டப் பாசக் கயிற்றால் 

கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு 

கட்டி உருட்டு கைகால் முறியக் 

 

கட்டு கட்டு கதறிடக் கட்டு 

முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட 

செக்கு செக்கு செதில் செதிலாக 

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு 

குத்து குத்து கூர்வடி வேலால் 

 

பற்று பற்று பகலவன் தணலெரி 

தணலெரி தணலெரி தணல் அதுஆக 

விடு விடு வேலை வெருண்டது ஓட 

புலியும் நரியும் புன்னரி நாயும் 

எலியும் கரடியும் இனித்தொடர்ந்து ஓட 

 

தேளும் பாம்பும் செய்யான் பூரான் 

கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் 

ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க 

ஒளிப்புஞ்சுளுக்கும் ஒருதலை நோயும் 

வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் 

 

சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு 

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி 

பக்கப் பிளவை படர்தொடை வாழை 

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி 

பற்குத் தரணை பருவரை யாப்பும் 

 

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் 

நில்லா தோட நீஎனக் கருள்வாய் 

ஈரேழ் உலகமும் எனக்குற வாக 

ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா 

மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும் 

 

உன்னைத் துதித்த உன்திரு நாமம் 

சரவண பவனே! சைலொளிபவனே! 

திரிபுர பவனே! திகழ்ஒளி பவனே! 

பரிபுர பவனே! பவமொழி பவனே! 

அரிதிரு மருகா அமரா பதியைக் 

 

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் 

கந்தா குகனே! கதிர்வே லவனே! 

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை 

இடும்பனை அழித்த இனியவேல் முருகா 

தணிகா சலனே! சங்கரன் புதல்வா! 

 

கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா! 

பழநிப் பதிவாழ் பால குமரா 

ஆவினன் குடிவாழ் அழகிய வேலா! 

செந்தின்மாமலையுறும் செங்கல்வராயா! 

சமரா புரிவாழ் சண்முகத்து அரசே 

 

காரார் குழலாள் கலைமகள் நன்றாய் 

என்நா இருக்க யான் உனைப்பாட 

எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் 

பாடினேன் ஆடினேன் பரவசமாக 

ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை 

 

நேச முடன்யான் நெற்றியில் அணியப் 

பாச வினைகள் பற்றது நீங்கி 

உன்பதம் பெறவே உன்னரு ளாக 

அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும் 

மெத்தமெத் தாக வேலா யுதனார் 

 

சித்தி ெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க 

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க 

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க 

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க 

வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன் 

 

வாழ்க வாழ்க வாரணத் துவசம் 

வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க 

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் 

எத்தனை அடியேன் எத்தனை செயினும் 

பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன் 

 

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே 

பிள்ளையென்று அன்பாய்ப் பிரியம் அளித்து 

மைந்தன்என் மீதுன் மனமகிழ்ந்து அருளித் 

தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய் 

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய 

 

பாலன் தேவராயன் பகர்ந்ததை 

காலையில் மாலையில் கருத்துடன் நாளும் 

ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி 

நேச முடன்ஒரு நினைவது வாகிக் 

கந்தர் சஷ்டி கவசம் இதனைச் 

 

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் 

ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு 

ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய 

அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் 

திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர் 

 

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் 

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் 

நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் 

எந்த நாளும் ஈரொட்டாய் வாழ்வர் 

கந்தர்கை வேலாம் கவசத் தடியை 

 

வழியாய் காண மெய்யாய் விளங்கும் 

விழியால் காண வெருண்டிடும் பேய்கள் 

பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும் 

நல்லோர் நினைவில் நடனம் புரியும் 

சர்வ சத்ரு சங்கா ரத்தடி 

 

அறிந்தென உள்ளம் அஷ்டலட் சுமிகளில் 

வீரலட்சுமிக்கு விருந்துண வாகச் 

சூரபத் மாவைத் துணித்தகை யதனால் 

இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த 

குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும் 

 

சின்னக் குழந்தை சேவடி போற்றி 

எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் 

மேவிய வடிவுறும் வேலவா போற்றி 

தேவர்கள் சேனாபதியே போற்றி 

குறமகள் மனமகிழ் கோவே போற்றி 

 

திறமிகு திவ்விய தேகா போற்றி 

இடும்பா யுதனே இடும்பா போற்றி 

கடம்பா போற்றி கந்தா போற்றி 

வெட்சிப் புனையும் வேலே போற்றி 

உயர்கிரி கனகசபைக்கோ ரரசே 

 

மயில்நட மிடுவோய் மலரடி சரணம் 

சரணம் சரணம் சரவண பவஓம் 

சரணம் சரணம் சண்முகா சரணம்! 

 

சுபம்.🙏🏼 

முருகன் துணை.

 

எல்லா மாதங்களின் சஷ்டி விரத தேதிகளை பார்க்க