Tamil NaalKaati - தமிழ் நாள்காட்டி

மனச்சுமை

நினைத்துப் பார்த்தாலே நெஞ்சு கொதிக்கிறது சாமி! எத்தனை பேர் என்னை கேலி செய்து வசை பாடி இருக்கிறார்கள்! எத்தனை பேர் என் முதுகில் குத்தி இருக்கிறார்கள்! அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றாக பாடம் புகட்ட வேண்டும்." என்று சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன். சாமியார் யோசித்தார். நீ ஒன்று செய், என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி. நீ யாரையெல்லாம் பழி வாங்க வேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக் கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக் கொண்டே வா, நீ எங்கு எல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும்." என்றார். இவ்வளவுதானா?' என்று சீடன், அன்றிலிருந்து யார் மீதெல்லாம் ஆத்திரமோ பழிவாங்க வேண்டும் என்ற நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஓர் உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப்பையில் போட்டுக்கொண்டே வந்தான். ஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது பெரிய சிரமமாக தெரியவில்லை. நாளாக நாளாக அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது. சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக் கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது. சீடன் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள். சீடன் மறுபடியும் சாமியாரிடம் வந்தான். என்ன புரிந்தது?" எனறு கேட்டார், சாமியார். பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக் கொண்டே வந்தால் அது சுமையாகிவிடும். துர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள்" என்றான் சீடன். சரி. ஆனால் நீ இன்னும் முழுக்கிணற்றை தாண்டவில்லை". என்றார் சாமியார். உன் பிரச்னை சுமை கூடி போச்சே' என்பதும் 'நாற்றம் அடிக்கிறதே' என்பதும் தான்! அந்த உருளைக்கிழங்குகளை அவ்வப்போது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறாய் இல்லையா?' என்று கேட்டார். ஆமாம்" என்றான் சீடன். மகனே, பிரச்சனை உருளைக் கிழங்கில் இல்லை. கோணி இருப்பதால் தானே அதில் உருளைகிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய்? எனவே உனக்கு சுமையில்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றமெடுக்காமல் இருக்க வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி. அவரவர்கள் செய்த கர்மாக்களை அவரவர்கள் அனுபவித்தே தீருவார்கள். இதில் நாம் தனியாக தூக்கிக் கொண்டு திரிய ஒன்றுமில்லை. நீ உன் வேலையில் கவனம் செலுத்தி, உன் கடமையை சரியாக செய்து வா".என்றார் சாமியார். உண்மை அது தான்! நாம் கைவிட வேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல, பழி வாங்கும் மனத்தையும் கூடத்தான். இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு எல்லாம் காரணம் மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான். நம் மனதில் என்றும் நினைக்க வேண்டியது புத்தியில் எப்போதும் இறை சிந்தனையும், மனதில் எப்போதும் இறை உணர்வும், நாவில் எப்போதும் இறை நாமமுமே.