விடுமுறையில் கிராமத்தில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு வந்திருந்தாள் ஏழாம் வகுப்பு படிக்கும் மீரா. தினமும் விளையாட போகும் போது, மரத்தடியில் கிடைக்கும் வேப்பங்கொட்டைகளைச் சேகரித்து வந்து மஞ்சள் பையில் போட்டுக்கொண்டிருந்தாள். "எதுக்கு இதை சேகரிக்குற?" என்று அம்மா கேட்ட போது, "அப்புறம் சொல்றேன்" என்றால். "இலை, குச்சிகளை வெச்சே விதவிதமா கிராஃப்ட் செய்வா.... அந்த மாதிரிதான் எதுக்காவது இருக்கும்" என்றார் அப்பா. அதற்கு பதில் சொல்லாமல் புன்னகைத்தாள் மீரா. ஒரு வாரம் கழித்து சென்னைக்குப் புறப்பட்டபோது, "அப்பா சென்னைக்குப் பக்கத்துல போனதும் நான் சொல்ற இடத்துல எல்லாம் காரை நிறுத்தணும். அங்கேயெல்லாம் பாதை ஓரமா இந்த வேப்பங்கொட்டைகளைப் போடப்போறேன். நூறு போட்டா பத்தாவது முளைக்குமில்லே. இதுல கிராஃப்ட் செஞ்சா வீட்டுக்கு மட்டும் தான் அழகு.... விதைச்சா ஊருக்கே அழகு" என்றால். அப்பாவும் அம்மாவும் மீராவை அனைத்துக்கொண்டனர்.